செங்கோட்டை- மதுரைக்கு கூடுதல் ரயில் இயக்க திமுக எம்.பி. கோரிக்கை!
செங்கோட்டை: செங்கோட்டை - மதுரை இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என திமுக எம்.பி. தங்கவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில், நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை திமுக எம்.பி. ச.தங்கவேலு, ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்சர்மா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, திமுக எம்.பி. ச.தங்கவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கரன் கோவில் வந்த ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை வைத்தேன். இதன் மூலம் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில் நிலையத்திற்கு தேவையானவற்றை ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சர்மாவிடம் கோரிக்கையாக கூறியுள்ளேன்.செங்கோட்டை முதல் புனலூர் வரை நடைபெற்று வரும் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அதே போல், செங்கோட்டை - மதுரைக்கு இடையே செல்லும் ரயிலை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எனவே செங்கோட்டை, மதுரையிடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும்.
செங்கோட்டை முதல் சிவகாசி வரை உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அவர் கள் கோயம்புத்தூர் செல்ல ஏதுவாக, தூத்துக்குடி - கோவை ரயிலில் விருதுநகரில் இணைக்கும் வகையில் செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் ஒன்று புதிய ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை பொது மேலாளரிடம் கூறியுள்ளேன். அதை அவர் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார் என்றார்.