கருணாநிதி உடல்நலம்.. டிவி பார்த்து கொண்டிருந்த கோவை தொண்டர் மாரடைப்பால் மரணம்
திமுகவின் தீவிர தொண்டர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
Recommended Video
கோவை: கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த தீவிர திமுக பிரமுகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அவரது தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இதனால் மனம் தாளாமல் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை காவிரி மருத்துவமனைக்கும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
நேற்றுமுன்தினம் கருணாநிதியின் உடல்நிலை கேள்விப்பட்டு திருவாரூரில் திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதேபோல, நேற்று சென்னை எண்ணூரிலும் திமுகவின் தீவிர தொண்டர் 63 வயதான ராஜூ என்பவர் கருணாநிதி உடல் குறித்து மிகுந்த மனவேதனை அடைந்து துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், கோவையிலும் ஒரு தொண்டர் உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் ரா.அம்சகுமார், 62 வயதான இவர் திமுகவின் நீண்டகால தொண்டர். எங்கு திமுக சம்பந்தப்பட்ட போராட்டங்கள், நிகழ்ச்சிகள், நடந்தாலும் அங்கு முதல் ஆளாக சென்று வந்து நிற்பார். குள்ளக்காபாளையம் 4-வது வார்டு அவைத்தலைவராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், கருணாநிதி உடல் நலம் குறித்த செய்திகள் பலவாறாக கடந்த 3 தினங்களாக வந்து கொண்டிருக்கிறது. அவரது செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துதான் அம்சகுமார் தெரிந்து கொண்டுள்ளார். அப்போது, தொலைக்காட்சியில் கருணாநிதியின் உடல் நலிவுற்ற செய்தியை மனவருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, தடீரென அம்சகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் டிவி பார்த்துக் கொண்டிருந்தவர் உயிர், அந்நிமிடமே பிரிந்து சென்றது. இது அப்பகுதி மக்கள், மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.