அடுத்த மே மாதம் நம்ம ஆட்சிதான்... மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை: தொழிலாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு மே மாதம் நமது ஆட்சி மலர்ந்து விடும். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் மு.ஸ.ஸ்டாலின் மற்றும் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மலர் வளையம் வைத்து அங்குள்ள நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மே தினம் உழைப்பாளர் சமுதாயத்தின் பெருமைகளை சொல்லி உழைப்பின் புகழ்பாடும் உன்னத திருநாள். உழைக்கும் தொழிலாளர்களுக்கும் தி.மு.க.வுக்கும் எப்போதும் பற்று உண்டு. தமிழ்நாட்டில் அண்ணா தலைமையிலான ஆட்சியின் போது மே 1-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அது கலைஞர் ஆட்சியில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர் நலனுக்கு தனி அமைச்சகம், தொழிலாளர் நல நிதியை நிர்வகிக்க தொழிலாளர் நல வாரியம், ஒப்பந்த தொழிலாளர் நலனுக்கு தனி சட்டம் என எண்ணற்ற திட்டங்களை தொழிலாளர்களுக்கு கொண்டு வந்தவர் திமுக தலைவர் கலைஞர்தான்.
நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என பெயர் சூட்டி அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைத்து தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தும் நிலையை உருவாக்கி தந்தவர் கலைஞர். தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ், ஊக்கத் தொகை வழங்கியது திமுக ஆட்சிதான். மின் வாரிய தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்கிய பெருமையும் திமுக ஆட்சிக்குத் தான் உண்டு.
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் இன்று தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று என்ன ஆட்சி நடக்கிறது? யார் முதல்வர் என்றே தெரியவில்லை. கடந்த தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தொழிலாளர்களை ஏமாற்றி வாக்கு பெற்றனர். இன்று தொழிலாளர்கள் நிர்கதியாக உள்ளனர். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழில் முதலீட்டு மாநாடு நடத்த போகிறார்களாம்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழப்பு, ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உயிரிழப்பு, ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை இப்படி பல கொடுமைகள் நடக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு கிடைத்திட அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சி மலரும். தொழிலாளர்கள் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி. அதற்காக தொழிலாளர்கள் சபதம் ஏற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.