ஸ்டாலினும் கையிலெடுத்தார்.. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓபிஎஸிடம் விசாரிக்கப்படுமாம்..!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் விசாரிக்க குழு அமைக்கப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் விசாரிக்க குழு அமைக்கப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்தான் என்றும் ஸ்டாலின் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆர்கே நகரில் இன்று மீனவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஆர்.கே.நகரில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அ.தி.மு.க-வின் தற்போதைய சூழல் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்து, ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர் என்றார்.

மக்களை ஏமாற்ற திட்டம்
அவர்கள் ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்ற திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அவரின் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் முயன்றார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மக்கள் பிரச்சனையில் தலையிடவில்லை
மக்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்று கூறிய ஸ்டாலின் மக்கள் பிரச்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலையிடவில்லை என்றும் சாடினார். மேலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதையும் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

மீனவர்கள் மீது தாக்குதல்
அப்போது இளைஞர்கள், மீனவர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். இதனால், மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்று கூறிய ஸ்டாலின் ஜல்லிக்கட்டு பிரச்னைக்குத் தீர்வு கண்டது மாணவர்களும் இளைஞர்களும்தான் என்றார்.

விசாரிக்க குழு அமைக்கப்படும்
அ.தி.மு.க தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும். ஓ.பன்னீர்செல்வத்தையும், சசிகலாவையும் விசாரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications