அழகிரிதான் அட்ரஸ் இல்லாதவர்… திமுகவின் ஆர்.எஸ். பாரதி கமெண்ட்
சென்னை: அட்ரஸ் இல்லாத அழகிரி திமுகவிற்கு தேவையில்லை. திருந்த வேண்டியது அழகிரிதான் என்று திமுக குறித்து மு.க. அழகிரி கூறிய கருத்துக்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுகவின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்த அழகிரி. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சையை கிளப்பினார். அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டனர்.

இதனால் மு.க. ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் தெரிவித்த கருத்துக்கள் திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து திமுகவிலிருந்து சில மாதங்களில் அதிரடியாக நீக்கப்பட்டார்.
புதுக்கட்சி துவங்குவார் என்று எதிர்பார்ப்பை கிளப்பிய அழகிரி கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு எதிராக செயல்பட்டார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்துவந்த அழகிரி சில மாதங்களாக அமைதி காத்தார்.
இந்நிலையில் நேற்று மதுரையிலிருந்து சென்னை வந்த அழகிரியை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு குறித்து கேள்விகளை எழுப்பினர்.
"திமுகவில் மீண்டும் இணைவீர்களா? என்ற கேட்டதற்கு, தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் ''தி.மு.க.வில் தகுதியற்றவர்கள் பலர் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்துகின்றனர். எனவே தி.மு.க.வினர் திருந்த வேண்டும். தி.மு.க.வினர் திருந்தினால் அக்கட்சியில் சேருவேன்'' என்றவர்
மேலும் அவர், "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது" என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடிக்காட்டினார்.
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வந்த தகவல் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அழகிரி, " ராஜினாமா குறித்த தகவல் எல்லாம் எனக்கு தெரியாது" என்றவர் அதைத்தொடர்ந்து "முகவரி இல்லாத ஆளைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள்" என கூறிவிட்டு சென்றார்.
அழகிரியின் இந்த கருத்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பேசியுள்ளார். அழகிரியை சேர்த்துக்கொள்ளும் அளவு திமுக ஒன்றும் வலிமை குறைந்த கட்சியல்ல. அழகிரிதான் திமுகவை விமர்சித்து தனக்கு முகவரி தேடிக்கொள்கிறார் என்றார். மேலும் திருந்தவேண்டியது அழகிரிதானே தவிர திமுக அல்ல என்றும் கூறியுள்ளார் ஆர்.எஸ். பாரதி.
திமுகவின் புதிய அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, செய்த தவறுகளை உணர்ந்து இனி அவ்வாறு நடந்துகொள்ளமாட்டேன் என உறுதிமொழி கொடுத்தால் தலைவர், பேராசிரியர், ஸ்டாலின் ஆகியோர் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி பரிசீலிப்பார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications