முறையாக இடைத் தேர்தல் நடந்தால்.., 3 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: ஸ்டாலின் பேட்டி
சென்னை: முறையாக தேர்தல் நடைபெற்றால், இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் இன்று மதியம் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்தபோது நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், மேலும் கூறியதாவது: இடைத் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்றார்.
திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்ற நிருபர்களின் கேள்விக்கு, முறையாக தேர்தல் நடைபெற்றால், இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாய சங்கங்களோடு கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும், ஸ்டாலின் தெரிவித்தார்.