ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களை தொடர்ந்து மாற்றுவது ஏன் தெரியுமா?: கனிமொழி பேட்டி
கோவை: திமுக நல்ல வேட்பாளர்களை அறிவித்துள்ளதை பார்த்து அச்சத்தில் தான் ஜெயலலிதா அதிமுக வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் அணி செயலாளரான எம்.பி. கனிமொழி திங்கட்கிழமை சேலத்தில் பிரச்சாரத்தை துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்று தான் தனது பிரச்சாரத்தை துவங்குகிறார். இதையொட்டி அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சேலம் சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வெயில்
ஜெலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் இரண்டு பேர் வெயில் தாங்க முடியாமல் உயிர் இழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கோடை காலம், வெயில் கொளுத்துகிறது என்பதே 2 பேர் பலியான பிறகு தான் ஜெயலலிதாவுக்கு புரிந்துள்ளது என்றால் அவர் ஆளும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நிலைமையை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதா
இரண்டு பேர் இறந்த பிறகு தான் சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதை மாற்றியுள்ளார் ஜெயலலிதா. மக்கள் மட்டும் வெயிலில் காய வேண்டும். ஆனால் சொகுசாக ஹெலிகாப்டரில் பறந்து வரும் அவர் மேடையில் ஏசியில் அமர்ந்து பேசுகிறார்.

தேர்தல் ஆணையம்
பல பிரச்சனைகள் குறித்து திமுக தேர்தல் ஆணையத்தை அணுகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு அமைக்கப்படும் மேடை, ஹெலிகாப்டர் செலவு, கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அளிக்கும் தொப்பி செலவு, ஜெயலலிதாவின் படத்துடன் கூடிய ஃபேன் வைப்பது ஆகிய செலவு எல்லாம் யாருடைய கணக்கு என்பது தெரியவில்லை.

திமுக
வரும் சட்டசபை தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுகவினர் மது ஆலைகளை நடத்துவதாக கூறுவது அரசியலுக்காக சொல்லப்படும் விஷயம். மதுவிலக்கு அமலுக்கு வந்தவுடன் திமுகவினர், அவர்களின் உறவினர்கள் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என்று தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தானே மதுவிலக்கு என மது உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படாது என்பதை அவர் தெளிவாக கூறியுள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள்
திமுக நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதனால் அதிமுகவுக்கு பயம் வந்துவிட்டது. இந்த காரணத்தினால் தான் அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டு வருவதோடு தேர்தல் அறிக்கையையும் இன்னும் வெளியிடவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை அருமையாக இருப்பதால் அதை காப்பியடித்து ஜெயலலிதா அறிவிப்புகள் வெளியிடுகிறார்.












Click it and Unblock the Notifications