பத்தாது, பத்தாது.. அத்தனை நாடுகளுக்கும் போகனும் மோடி.. 'தூண்டி' விடும் பொன். ரா!
கோவை: பிரதமர் நரேந்திர மோடி 5 ஆண்டு கால ஆட்சியில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் நாட்டை கெடுத்து வைத்துள்ளது. அதில் இருந்து நாட்டை திசை திருப்பி உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனில் பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
5 ஆண்டுகளில் பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என நான் விரும்புகிறேன். உலக நாடுகள் இந்தியாவை ஏற்றுக்கொள்ளும் நிலையை அவர் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கையில் பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார். அவர் ஓராண்டில் 18 நாடுகளுக்கு சென்றுள்ளார். நேரு கூட இத்தனை நாடுகளுக்கு செல்லவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மோடி விவசாயிகளின் வீடுகளுக்கு செல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.