காதலிப்பதாக கூறி பலாத்காரம்.. உளுந்தூர்ப்பேட்டை டாக்டர் சென்னையில் கைது
சென்னை: சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த டாக்டரை சென்னை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர், உளுந்தூர்பேட்டை போலீசில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு புகார் செய்தார்.

அதில், "கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் எனது தாயாருக்கு சிகிச்சை பெற சென்றேன். அங்கு உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இஸ்ரேல் என்பவர் பயிற்சி டாக்டராக இருந்தார். அடிக்கடி சந்தித்ததால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி இருக்கிறோம்.
ஆனால் அவர், என்னை ஏமாற்றி விட்டு கேரளாவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய டாக்டர் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.
இந்த வழக்கு உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை மடிப்பாக்கம் மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. மடிப்பாக்கம் உதவி கமிஷனர் லட்சுமி நாராயணன் மேற்பார்வையில் மடிப்பாக்கம மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
தற்போது டாக்டர் இஸ்ரேல், ஆந்திராவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் சென்னை வந்த டாக்டர் இஸ்ரேலை, மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications