செல்போன் டவர் விழுந்து காயம்- ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு என புகார்!
சென்னை: சென்னையில் செல்போன் டவர் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த லலிதா ஸ்டான்லி அரசு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுமாறு கட்டாயப்படுத்துவதாக மகள் ராசாத்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கொருக்குபேட்டை ஜீவா நகரைச் சேர்ந்தவர் 44 வயதான லலிதா. இவர் வழக்கம் போல் வீட்டு வேலை செய்துவிட்டு மதியம் 12.30 மணி போல் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மின்ட் தெரு வழியாக லலிதா சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென்று தனியார் செல்போன் டவர் ஒன்று உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். லலிதா பலத்த காயத்துடன் அருகில் இருந்த ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
படுகாயம் அடைந்த லலிதா சனிக்கிழமை பிற்பகலில் ஐசியூ பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முதல் 3 நாட்கள் ஊசி மாத்திரை என வேளைக்கு கொடுக்கப்பட்டு நன்றாக மருத்துவர்கள் கவனித்து வந்த நிலையில், திடீரென கடந்த இரண்டு நாட்களாக மருத்து, மாத்திரை, ஊசி என எதுவும் வழங்கப்படவில்லை என்று லலிதாவின் மகள் ராசாத்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், லலிதா குணமடைந்துவிட்டதாகவும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் ஸ்டான்லி மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர் என்று ராசாத்தி தெரிவித்துள்ளார். ஆனால் லலிதாவால் யாருடைய துணையும் இன்றி எழுந்து நிற்க கூட முடியவில்லை. கையில் எடுத்து சாப்பிட முடியவில்லை. இப்படி மிக மோசமான நிலையில் உள்ளவரை வீட்டிற்கு அனுப்பினால் எங்களால் என்ன செய்ய முடியும் என்று ராசாத்தி வேதனை தெரிவித்துள்ளார்.