தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் மரணமடைந்தாரா? பிரேத பரிசோதனை அறிக்கையால் சர்ச்சை
சென்னை: கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சாராய வியாபாரியும் தாதாவுமான ஸ்ரீதர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 4 -ந் தேதி தாதா ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது வழக்கறிஞர் புருஷோத்தமனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வழக்கறிஞருடன் கம்போடியா விரைந்த ஸ்ரீதரின் மகள் அவரது உடலை அடையாளம் காட்டினார். ஆனால் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவரமுடியாத சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதரின் மகள் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் ஸ்ரீதரின் உடல் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தது. இருப்பினும் சில ஆவணங்களில் இருந்த பிரச்சனையால் சுமார் 7 மணிநேரம் ஸ்ரீதர் உடல் விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஸ்ரீதரின் உடலை விமானநிலைய கார்கோ அதிகாரிகள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை மற்றும் டி.என்.ஏ பரிசோதனை செய்து முடிப்பதற்காக ஸ்ரீதர் உடல் செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.