இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரவை தமிழகத்துக்குள்ளேயே அனுமதிக்க கூடாது: வேல்முருகன்
சென்னை: இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரவை தமிழகத்துக்குள்ளேயே அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றரை லட்சம் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க அனுமதி கோரியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

விக்னேஸ்வரன் வாழ்த்து
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர்களின் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கொள்கை பிறழாமல் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர் ஜெயலலிதா. "அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு" என்ற வள்ளுவன் கூற்றுக்கமைய இந்நான்கு பண்புகளும் ஜெயலலிதாவின் ஆட்சியில் குறைவுபடாமல் இருந்துவருவதை நாம் அவதானித்திருக்கின்றோம்.

ஜெ. உறுதுணையாக இருப்பார்
பலகாரணங்களினால் எமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு இதுகாறும் இருந்துவந்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். ஜெயலலிதா போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாக இருப்பர் என்ற நம்பிக்கை எமக்குண்டு என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சந்திப்போம்- ஜெ.
இதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங் கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்களுக்கு நீதி கிடைக்க முதல்வர் என்ற முறையில் என்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்துள் ளேன். இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் மற்றும் இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் நீங்கள் என்னை சந்திக்க விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் எனவும் கூறியிருந்தார்.

கொதிக்கும் சிங்களம்
இந்த பரஸ்பர வாழ்த்து மற்றும் நன்றி தெரிவிப்பானது போர்க்குற்றவாளிகளான சிங்கள தேசத்தை அதிரவைத்துள்ளது. தற்போது இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு சிங்களத் தலைவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலையீடு செய்து ஈழத் தமிழருக்கு உரிய நீதியைப் பெற்றுத் தந்துவிடுவார்களோ என சிங்களதேசம் பதைபதைத்துப் போய் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறது.

மங்கள சமரவீர முயற்சி
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர முயற்சிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஜூன் மாதம் 13,14 தேதிகளில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வருகை தர உள்ளார். அப்போது ஜெயலலிதாவை சந்திக்க அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

ஜெ. சந்திக்கமாட்டார்
ஆனால் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த ரத்தகறைபடிந்த போர்க்குற்றவாளிகளின் கரங்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் கைகுலுக்கவேமாட்டார் என உலகத் தமிழினமே பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. நிச்சயம் அந்த நம்பிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காப்பாற்றுவார்கள் என்பதும் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

பதிலடி கொடுக்க வேண்டும்
அத்துடன் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; ராஜபக்சே உள்ளிட்டோரை போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்த வேண்டும்; தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இத்தருணத்தில் மீண்டும் வலியுறுத்தி சிங்களவருக்கும் மங்கள சமரவீரவுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications