மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நல்லெண்ணத்தை கொச்சைப்படுத்துவதா?: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நல்லெண்ணத்தை கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர்களிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டது உள்ளதைத் தொடுவதாக அமைந்திருந்தது. மீனவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயர மத்திய அரசு எவ்வளவு முதலீடு வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். ஆனால் அவர் கூறியதை அறியாமல் சிலர் அறிக்கை விடுவது நியாயமில்லை.
எல்லை தாண்டி மீன்பிடித்தால் அங்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் தமிழக மீனவர்கள் என்ற காரணத்தினாலும், சர்வதேச கடல் சட்டதிட்டங்களால் தொல்லைகள் ஏற்பட்டு மீனவர்கள் வாழ்க்கை பாதித்துவிடக் கூடாது என்ற அடிப்படையிலுமே எல்லைத் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என்று சுஷ்மா கூறியுள்ளார். இந்த நல்ல எண்ணத்தைக் கொச்சைப்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
மேலும், மதுரை உயர்நீதிமன்றத்தில் இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது பல கடத்தல் வழக்குகள் போடப்பட்டுள்ளதை கடலோர காவல்படை அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நிலையில் ஏதோ தமிழக மீனவர்கள் என்றாலே கடத்தல்காரர்கள் என்று மத்திய அரசு கூறிவிட்டதைப் போல கலகம் ஏற்படுத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.