ராமஜெயம் கொலையில் எந்த துப்பும் கிடைக்கலையே... இதுதான் சட்டம்- ஒழுங்கா?: குஷ்பு
திருச்சி: கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுக்கு வாய்ப்பளித்து ஏமாந்தது போதும் என்றும் இந்த முறை திமுகவுக்கு வாக்களிக்குமாறும் கூறி திருச்சி தொகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்தார் நடிகை குஷ்பு.
திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு, திருச்சி லோக்சபா தொகுதி தி.மு.க வேட்பாளர் மு. அன்பழகனை ஆதரித்து நத்தர்ஷா பள்ளிவாசல், உறையூர், சோமரசம்பேட்டை, எ.புதூர், குழுமணி, மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:

திமுகவினருக்கு பயம் கிடையாது....
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் தி.மு.கவுக்கு 4வது இடம் கிடைக்கும் என்றும், அதனால் தி.மு.கவினர் பயப்படுகின்றனர் என்றும் பேசி வருகிறார். தமிழக முதல்வருக்கு நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் தி.மு.கவினருக்கு பயம் என்கிற வார்த்தைக்கே இடமே இல்லை.

விவசாயிகள் மரணம்...
பின்தங்கிய மக்களை, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களை முன்னுக்கு கொண்டு வரும் வகையில் ஆட்சி நடத்தியவர் கலைஞர். முந்தைய ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நலனுக்காக ரூ.7000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்தவர் கலைஞர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நிலைமை, வறட்சி காரணமாக 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் உடல்நலமின்மை காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் இறந்ததாக விளக்கம் கூறுகின்றனர். அதே நேரத்தில் இறந்த 12 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கியவர் கருணாநிதி.

சுய உதவிக் குழுக்கள் முடக்கம்....
ரூ.5 கோடி செலவு செய்து பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்கள். ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
மகளிர் முன்னேற்றத்தைத் தொடங்கப்பட்ட சுய உதவிக்குழுக்களை முடக்கியவர் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண்பேன் என்று கூறினாரே, மின்வெட்டு பிரச்னைக்குத் தீர்த்தாரா இல்லையே?

கேள்விக்குறியான சட்டம்-ஒழுங்கு....
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு இருக்கிறதா என்று கேட்கக்கூடிய நிலைமை இருக்கிறது. திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டாரே, அதில் இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லையே. இதுதான் தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு. திருச்சி தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிடும் வாய்ப்பு தி.மு.கவுக்கு கிடைத்திருக்கிறது.
தொடர்ந்து 10 ஆண்டுகள் துணைமேயராக இருந்த பணியாற்றிய அன்பழகனுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை வெற்றி பெற செய்யவைக்க வேண்டும். உங்கள் பிரச்னையை தேடி வந்து தீர்க்கக்கூடியவர்.

ஏமாந்தது போதும்....
கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுக்கு வாய்ப்பளித்து ஏமாந்தது போதும். எனவே இந்த முறை திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications