தூத்துக்குடி அருகே இரட்டைக் கொலை.. பதற்றம்.. போலிசார் குவிப்பு
தூத்துக்குடி அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய 2 பேர் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: புதூர் பாண்டியாபுரத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி மற்றும் அவரது நண்பர் முத்துக்குமார் ஆகிய 2 பேர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுார்பாண்டியாபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஆவர். இவர் பஞ்சாயத்து தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

முனியசாமி இன்று மாலை புதுார்பாண்டியாபுரத்தில் அவருடைய நண்பரான முத்துக்குமார் என்பவருடன் புதுார்பாண்டியாபுரம் ஊரணி அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயமடைந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் புதுார்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முனியசாமி மனைவி மஞ்சுளாவும் ராமச்சந்திரன் மனைவி பாக்கியலட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ராமச்சந்திரன் பதவியை தனது மனைவிக்கு விட்டுத்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு முனியசாமி மறுக்கவே இருவருக்கும் முன் பகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முனியசாமி அவரது நண்பருடன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முன்பகை காரணமாக இந்த இரட்டைக் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications