அப்துல் கலாம் இறைவன் மனிதகுலத்திற்கு அளித்த வரம்: இளையராஜா பெருமிதம்
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறைவன் மனிதகுலத்திற்கு அளித்த வரம் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் குடும்பத்தார் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச பவுன்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கியுள்ளனர். அறக்கட்டளையின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலாம் குடும்பத்தார் முன்னிலையில் இசைஞானி இளையராஜா அறக்கட்டளையின் லோகோவை வெளியிட்டார்.

இளையராஜா
கோடிக்கணக்கானோரின் மனதை தொட்ட ஒரே இந்தியர் டாக்டர் கலாம் தான். அவர் நம் மனதில் வாழ்ந்தார், வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இந்த பூமியில் பிறந்தது இறைவன் மனிதகுலத்திற்கு அளித்த வரம். எந்த ஒரு சினிமா நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ கலாமின் புகழுக்கு அருகில் கூட வர முடியாது என்கிறார் இளையராஜா.

கலாம்
நம் நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் கலாமின் ஆதரவாளர்கள் இருப்பதை பார்த்து மகிழ்கிறேன். அண்மையில் நான் ஒரு குக்கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு டாக்டர் கலாமின் பிரபலமான வாசகங்களுடன் கூடிய அவரது புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்திருந்தார்கள். உலக மக்கள் அவரின் எளிமையையும், நேர்மையையும் கண்டு வியக்கின்றனர் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

கலாம் குடும்பத்தார்
கலாம் அறக்கட்டளையை அவரது குடும்பத்தார் நிர்வகிப்பார்கள். கலாமின் நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள் அறக்கட்டளையின் ஆலோசகர்களாக இருப்பார்கள்.

கனவுகள்
டாக்டர் கலாம் பல கனவுகளை கண்டார். அவரது கனவுகளை ஒவ்வொன்றாக நினைவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்துவோம் என கலாமின் அண்ணன் மகளும், அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் நசீமா மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

நூலகங்கள்
இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வீடுதோறும் நூலகங்கள் அமைக்கக் கோரி தேசிய அளவில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அறிவியலின் அடிப்படைகளை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என கலாமின் பேரன் ஷேக் தாவூத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications