அதான் பொன்மனச் செம்மலின் மனசு!
மனிதரை மதிக்கும் மனிதநேயமிக்க எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு இது.
ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள், அருகே அமைச்சர் நெடுஞ்செழியன்...
இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி.
முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்.
இப்போது ராதா அவர்கள் விருது வாங்கச் செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச் செய்கிறார்.
ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிகுந்த ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி.
மேடையில் முதல்வரைக் காணவில்லை. குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்துது இன்னும் அதிர்ச்சி ராதாவுக்கு.
ராதா ஏதோ சொல்லமுயலும் போது, அவரைத் தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது.
"நான் ஆரம்பக் காலத்தில் கஷடபடும்போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும், தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி, இருக்க இடம், உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்தீர்கள்.
நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தங்களை அவமதிக்கும் செயலாகும். தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்க வேண்டும்," என்று சொன்னதுதான் தாமதம், எம்கே ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின...
ஒரு மாநிலமுதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து எம்கே ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்த பொன்மனச் செம்மலைப் புகழ வார்த்தைகள்தான் ஏது?
(தகவல்: எம்கே ராதாவின் மகன் டாக்டர் சுகுமார் ராதா.. பகிர்ந்தவர்: என்எஸ்கே நல்லதம்பி)