ஆசிரியர் தினம்.. டாக்டர். ராதாகிருஷ்ணனே விரும்பி பார்த்த படம்.. அதுவும் அந்த நடிகரோடு..அந்த கமெண்ட்!
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி வெளியே தெரியாத சுவாரசியமான தகவல் ஒன்றை பார்க்கலாம்.
டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆசிரியராகவும், அரசியல் பிரமுகராகவும், தத்துவவாதியாகவும் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் கலையை போற்றி ரசிக்க கூடியவர் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்தான்.

இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனுடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்த்து ரசித்த திரைப்படம் மற்றும் அந்த திரைப்படத்தைப் பற்றி அவர் என்ன கூறினார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆசிரியராக இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இந்தியா முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வரும் இன்று அந்த ஜனாதிபதியே கொஞ்சமும் அசராமல் இடைவேளையே இல்லாமல் தொடர்ந்து முழுவதுமாக மூன்று மணி நேரம் ஒரு படத்தை முழுமையாக பார்த்தார் என்றால் நம்ப முடிகிறதா..!?
அப்படி அவர் பார்த்த படமும் அந்தப் படத்திற்கு அவர் கொடுத்த கமெண்ட் குறித்த தகவல்களும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் கலை ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது.திருத்தணியில் 1888 ஆம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன். தெலுங்கு தாய்மொழியாக கொண்டவர் இவர். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.

அதைத் தொடர்ந்து மைசூர், கல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் தத்துவ பேராசிரியராக பணியாற்றினார். இந்தியாவில் மாதா பிதாவிற்கு அடுத்தபடியாக தெய்வத்திற்கு மேலாக வைத்து போற்றப்படும் குரு தொழிலை புனிதமாக கருதி ஆசிரியர் தொழிலை சிறப்பாக செய்து பல மாணவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார்.
தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த காலகட்டத்தில் முதலமைச்சர் ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட கட்டாய ஹிந்தி கல்வித் திட்டத்தை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்களுள் முக்கியமானவர் ராதாகிருஷ்ணன். அதேபோல் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலகட்டத்தில் மத்திய ஆட்சி மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜினாமா செய்த இரண்டு மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணனிடம் கூறிய போது அதை ஏற்றுக்கொள்ளவும் மறுத்தார்.
தெலுங்கு தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ் மீதும் தமிழ் கலைகள் மீதும் மிகப்பெரிய பற்றுடன் இருந்தார்.ஜனாதிபதியாக இருந்தாலும் தன் அலுவல்களுக்கு மத்தியில் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தை சிவாஜியுடன் அமர்ந்து பார்த்த டாக்டர் ராதாகிருஷ்ணன், மூன்று மணிநேர படமும் எந்த இடைவேளையும் இன்றி ஜனாதிபதிக்கு திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.
இடையில் எங்கும் எழுந்து செல்லாமல் திரையின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் படம் முழுவதையும் ரசித்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சிவாஜியுடன் அமர்ந்து 'சிவ ஜீயை' பார்த்தேன் என்று சிவாஜி கணேசன் நடிப்பையும் திருவிளையாடல் படத்தையும் பாராட்டியுள்ளார் என்ற தகவல் தமிழ் சினிமாவின் மீது அவர் கொண்ட ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications