இப்படி ஒரு வாத்தியார் இனி நமக்கு கிடைப்பாரா?
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளே இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன்!!! இளம் வயதிலேயே புத்தகமும் கையுமாக அலைந்தவர்... கண்ணில் பட்டவற்றையெல்லாம், காதில் கேட்டவற்றையெல்லாம் தேடி தேடி படித்தவர்!! ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியராகவும், இந்திய அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர்.
எந்த தலைவருக்குமே பயப்படாமல் தன் கருத்தை துணிந்து சொல்பவர்! அப்படி சொல்லக்கூடிய கருத்து ஆணித்தரமாக நச்சென்று இருக்குமாம்! இல்லையென்றால் பிரதமர் நேருவிடம் சென்று, "நாடு போகும் போக்கு சரியில்லையே" என்று பகிரங்கமாக சொல்வாரா?? தீண்டாமை இந்து சமயத்துக்குத் தேவையில்லாதது என்பதில் உடும்புப் பிடியாக இருந்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

சினேக உறவு
தன்னிடம் படிக்கும் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக்கே வந்து சந்தேகம் கேட்டால் ராதாகிருஷ்ணனுக்கு அவ்வளவு பிடிக்குமாம்!!! வகுப்பில் இருப்பதைவிட வீட்டுக்கு மாணவர்கள் வந்துவிட்டால், உடனே தோளில் கைபோட்டுக் கொண்டு சினேக உறவையும், உணர்வையும் ஒருசேர ஊட்டுவாராம்! இதைவிட, வீட்டுக்கு வந்த மாணவர்கள் மேல் பாசம் பெருக்கெடுத்து, தன் கையாலேயே அவர்களுக்கு டீ போட்டும் கொடுப்பாராம்! இப்படிப்பட்ட ஆசிரியரை நினைவுகூறும் வகையில்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

மரியாதை பார்வை
நம் தெருவில் எத்தனையோ பேர் நம்மை கடந்த போனாலும், நாம் அடையாளம் கண்டு பேசுவது நம் கடந்த கால ஆசிரியர்களே!! ஆசிரியர்கள் தெருவில் நடந்து சென்றாலே அனைவரது கண்களிலும் நன்றி கலந்த மரியாதை பார்வை வீசி செல்லப்படும். அதற்கு காரணம், நம் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் அவர்கள்தான் நமக்கு வழிகாட்டியாக விரல்பிடித்து வருகிறார்கள். அப்போது பிடித்த இறுக்கமான அந்த பற்றுதான், பள்ளியை முடித்து வெளியே வந்தாலும் நமக்கு அவர்களிடம் தொடர்கிறது. ஆசிரியர்கள் பதவி ஓய்வு பெற்றுவிட்டாலும் நமக்கு அவரிடம் நமக்கு எப்போதுமே அதே பாசம்.. அதே மரியாதைதான்!!

உயரத்திற்கு செல்கிறான்
கல்வியுடன் மனித மாண்புகளையும், சமூக சிந்தனைகளையும் பகிர்தலின் மூலம் மாணவர்கள் பழக்கப்படுத்தி கொடுப்பவர்களே ஆசிரியர்கள். எந்த மாணவன் தன் ஆசிரியருடன் அளவளாவி பழகி உரையாடுகிறானோ அவனே சமூகத்தில் கவனிக்கப்படும்படியான உயரத்திற்கு செல்கிறான். எத்தனையோ பேட்டிகளில், நூல்களில் ஐன்ஸ்டீன் முதல்ல அப்துல்கலாம் வரை தங்கள் ஆசிரியர்களை பற்றியே உயர்வாக கூறியதற்கு காரணமும் இதுதான்!

அன்பு உத்தரவாதமாகும்
மாணவர்கள் - ஆசிரியர்கள் இணைந்துவிட்டால், அங்கு உத்தரவாதமாக அன்பை எதிர்பார்க்கலாம்! மாணவர்களும் ஆசிரியர்களின் பாதுகாப்பு சுவாசத்திற்குள் அடைபட்டு போகிறார்கள். ஆசிரியர்களிடத்தில் 'பிள்ளைகள்' என்று சொல்லி பாருங்கள்... சட்டென்று அவர்களுக்கு கவனத்திற்கு வருவது தான் பெற்ற பிள்ளைகளைவிட மாணவர்களே!!

இந்நிலை மாற வேண்டும்
வெறும் ஏட்டு பாடங்கள் அன்றி, மனிதத்தையும், இனம், ஜாதி, மதம், மொழி என்ற பாரபட்சமற்ற யதார்த்த கல்வியையும் ஆசிரியர்கள் கற்று தருபவர்களே ஆசிரியர்கள். அன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டால், ஆசிரியராக பணிக்கு நினைப்பவர்கள் குறைவு என்றே தோன்றுகிறது! ஒரு காலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பின்னாளில் எப்படியெல்லாம் உலக பெற்றவர்களாக மாறினார்கள் என்று தெரியுமா? ரவீந்திரநாத் தாகூர் ஒரு ஆசிரியர்தான். அன்னை தெரசா பூகோள ஆசிரியைதான். நம் நாட்டை ஆண்ட பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க நாட்டை ஆண்ட பாரக் ஒபாமாவும் ஆசிரியர்கள் தான். எனவே இந்த நிலை இனியாவது மாற வேண்டும்!

அரிய புதையல்கள்
ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் கிடைத்த அரிய புதையல் ஆசிரியர்கள்தான்!! வருங்கால இந்தியாவை மாணவர்கள் மூலம் தீர்மானிக்க போகிற.. மாபெரும் எதிர்காலத்தை மாணவர்கள் மூலம் உருவாக்க போகிற... சக்தி படைத்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தத்தான் இந்த ஆசிரியர் தினவிழா!












Click it and Unblock the Notifications