'விரதத்தை' முடித்தார் ராமதாஸ்.. 'குடியை' விரட்டியடிக்க தர்மபுரியில் முழக்கம்!
தர்மபுரி: பிரசாரத்தை திடீரென நிறுத்தி விட்டு அமைதி காத்து வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முதல் மீண்டும் பிரசாரக் களத்தில் குதித்துள்ளார். தர்மபுரியில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவர் குடிப் பழக்கத்தைக் கடுமையாக சாடியும், குடிகாரர்களை அதிகரிக்க வழி ஏற்படுத்தி விட்ட கட்சிகளையும் கடுமையாக சாடினார்.
மேலும் ஓட்டு கேட்டு வரும் தலைவர்களிடம் மது விலக்கை அமல் செய்வீர்களா என்று கேளுங்கள், அவர்கள் மறுத்தால் விரட்டியடியுங்கள் என்றும் அவர் காட்டமாக பேசினார்.
ராமதாஸ் பேச்சு பாமகவினருக்குக் குஷியைக் கொடுத்துள்ளது. ஆனால் 'குடிகாரர்கள்' குறித்து அவர் ஆவேசமாக பேசியுள்ளதால் தேமுதிகவினர்தான் சற்று தர்மசங்கடமாகியுள்ளனராம்.
டாக்டர் அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட அடிலம், கொள்ளுப்பட்டி, முருக்கம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, பூமாண்டஅள்ளி ஆகிய கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார் ராமதாஸ்.
அவரது பேச்சிலிருந்து...
67 வருஷமாச்சு.. அப்படியே இருக்கிறது தர்மபுரி இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் தர்மபுரி மாவட்டம் இன்னும் பின் தங்கியே உள்ளது.
பாவம்ப்பா நீங்க
இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் பாவப்பட்டவர்கள். இந்த மக்களின் வளர்ச்சிக்காக இதுவரை ஆண்டு வந்த திராவிட கட்சிகள் எதையும் செய்யவில்லை.
மதுவைக் கொடுத்து கெடுத்து விட்டனர்
வறுமையையும், ஏழ்மையையும் ஒழிப்பதற்கு பதிலாக மதுவை கொடுத்து மக்களை கெடுத்து வைத்து இருக்கிறார்கள்.
குடியை ஒழிக்கச் சொல்வது நாங்க மட்டுமே
தமிழகத்தில் மதுவை ஒழிக்க சொல்லும் ஒரே கட்சி பாமக தான். அதிமுகவும், திமுகவும் மதுவை குடிக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
விரட்டியடியுங்கள்
வருகிற தேர்தலில் உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள். அவர்களிடம் மதுவை உங்களால் ஒழிக்க முடியுமா? என்று கேளுங்கள். எங்கள் ஓட்டு மாம்பழத்திற்கு தான் என்று கூறி அவர்களை விரட்டி அடியுங்கள். பின்தங்கிய தர்மபுரி மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற பாமகவால் மட்டுமே முடியும்.
ஆடு மாடை வச்சு என்னத்தப் பண்ண...
மக்களின் வறுமையை போக்க தமிழக அரசு ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. ஆடு, மாடுகளுடன் நாம் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான இருக்கிறோம். இதன்மூலம் நமது வாழ்க்கை தரம் முன்னேறி விடாது. த
அன்புமணி உங்க பிள்ளை
தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உங்கள் வீட்டுப்பிள்ளை. உங்களது சுக துக்கங்களில் பங்கேற்பார். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் தர்மபுரி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவார். இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் அவர் பாடுபடுவார் என்றார் ராமதாஸ்.