டாக்டர் சுனிதி சாலமன் மரணம்: இந்தியாவில் முதல் முறையாக எச்ஐவி பாதிப்பை கண்டறிந்தவர்
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக எச்ஐவி பாதிப்பை கண்டுபிடித்த டாக்டர் சுனிதி சாலமன் சென்னையில் செவ்வாய்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 74.
சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பை கண்டுபிடித்தவர் டாக்டர் சுனிதி சாலமன். இவரது கணவர் டாக்டர் விக்டர் சாலமன் இறந்துவிட்டார். மகன் டாக்டர் சுனில் சுஹாஸ் சாலமன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் சுனிதி சாலமன் எச்ஐவி குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

6 பெண்களுக்கு எச்ஐவி
கடந்த 1986ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் 6 பெண்களுக்கு எச்ஐவி வைரஸ் தொற்று இருப்பதை டாக்டர் சுனிதி சாலமன் கண்டுபிடித்தார்.
இந்தியாவில் பரபரப்பு
வெளி நாடுகளில் மட்டுமே எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கருதி வந்த காலத்தில், தமிழகத்தில் எச்ஐவி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அறிவித்தார் டாக்டர் சுனிதி சாலமன். இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எச்ஐவி உறுதி
எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக இவர்கள் கூறியதை யாரும் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, ரத்த மாதிரிகள் வேலூர் சிஎம்சி கல்லூரிக்கும், தொடர்ந்து அமெரிக்காவுக்கும் அனுப்பி, உறுதி செய்யப்பட்டது.
எச்ஐவியை ஒழிக்க தீவிரம்
இந்தியாவில் எச்ஐவியை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்து வந்தார். எச்ஐவியை கண்டுபிடிக்க தனியாக பரிசோதனை மையம், சிகிச்சை மையம் போன்றவற்றை கொண்டு வந்தார்.
விருப்ப ஓய்வு
அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அவர், எய்ட்ஸ் நோயாளிகளுக்காக சேவையாற்ற விரும்பி, 1996ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பிறகு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி சேவையாற்றி வந்தார்.
கல்லீரல் புற்றுநோய்
சென்னை அண்ணா நகரில் தனியாக வசித்து வந்த அவர் தனக்கு துணையாக இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் மரணமடைந்தது முதல் அவர் வளர்த்து வந்த நாய்கள், அவரது புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றன.
இறுதிச் சடங்கு
இவரது கணவரும் இதய சிகிச்சை நிபுணருமான விக்டர் சாலமன் 2006-ஆம் ஆண்டு காலமானர். இவர்களது மகன் டாக்டர் சுனில் சுகாஸ் சாலமன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். டாக்டர் சுனிதி சாலமனின் இறுதிச் சடங்கு புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எச்ஐவி பாதிப்பு குறைவு
டாக்டர் சுனிதி சாலமன் முயற்சியால்தான், தற்போது இந்தியாவில் எச்ஐவி, எய்ட்ஸ் பாதிப்பு குறைந்துள்ளது என்று சென்னை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் மங்களா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications