குமரியார் வழியில் தமிழிசை.... இரு பெரும் தேசியக் கட்சிகளின் தலைவர் பதவியை வகித்த முதல் தந்தை - மகள்!
சென்னை: தமிழகத்தில் இரு பெரும் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் மாநிலத் தலைவர் பதவியை வகித்த முதல் தந்தை, மகள் என்ற பெயரை குமரி அனந்தனும், அவரது மகள் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் பெற்றுள்ளனர்.
குமரி அந்தன், காங்கிரஸ் கட்சி உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதற்கு முன்பு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்தவர். தற்போது டாக்டர் தமிழிசை தமிழக பாஜகவின் தலைவராக உயர்ந்துள்ளார்.
இப்படி தந்தையும், மகளும் இரு பெரும் தேசியக் கட்சிகளின் தலைவர் பதவியில் அமர்ந்தது, அமர்வது இதுவே முதல் முறையாகும்.
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நீண்ட காலமாக பாஜகவில் இருப்பவர். மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தாலம் கட்சிப் பணிக்காக தீவிரமாக செயல்பட்டுவரக் கூடியவர்.
சிறந்த பேச்சாளர்
பாஜகவில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில சிறந்த பேச்சாளர்களில் இவருக்கும் தனி இடமுண்டு. சொல்ல வரும் கருத்துக்களைத் தெளிவான வார்த்தைகளில், எதிர்ப்பாகவே இருந்தாலும் கூட பதமாக அதேசமயம் ஆணித்தரமாக எடுத்து வைக்கக் கூடியவர் தமிழிசை.
தேசியச் செயலாளர்
இதற்கு முன்பு தமிழிசை தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
தந்தை வழியில்
இவரது தந்தை குமரி அனந்தன். இவரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. காமராஜரின் சிஷ்யர், சொல்வளம் மிக்கவர், பேச்சில் புலியாக சீறிப் பாய்பவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். இவரது பதவிக்காலத்தின்போதுதான் காங்கிரஸ் உடைந்து மூப்பனார் வெளியேறினா். தமாகா பிறந்தது.
முதல் தந்தை - மகள்
தற்போது குமரி அனந்தனும், தமிழிசையும் புதிய வரலாறு படைத்துள்ளனர். குமரி அனந்தன் தேசியக் கட்சியான காங்கிரஸின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர். அவரது மகள் தமிழிசையோ, இன்னொரு பெரும் தேசியக் கட்சியான பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவராக உயர்ந்திருக்கிறார்.
வசந்தகுமாரும் தலைவரானால்...
தற்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் புதிய தலைவர் பதவிக்கான பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டுள்ளன. இந்தப் பதவியைப் பெற எச். வசந்தகுமார் மோதிக் கொண்டிருக்கிறார். இவர் குமரி அனந்தனின் தம்பி ஆவார். தமிழிசைக்குச் சித்தப்பா. இவர் தலைவரானால், ஒரே நேரத்தில் இரு பெரும் தேசியக் கட்சிகளின் தலைவர் பதவியை வகித்த முதல் குடும்பம் என்ற பெயரை குமரியார் குடும்பம் பெறும்.