ஓபிஎஸ் அணிக்கு வர 20 எம்எல்ஏக்கள் ரெடி... எங்க நம்பர் 135 ஆக மாறும் - பாண்டியராஜன்
நாடகம் முடியும் நேரம் வந்துவிட்டது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 135 ஆக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த கல்வி அமைச்சர் பாண்டியராஜன், இன்று முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்க்கு ஆதரவு படிப்படியாக அதிகரிக்கும் என்றும் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 135 பேராக உயரும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். நாடகம் முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
ஓபிஎஸ் அணியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று காலையில் இணைந்தார்.இவரைத் தொடர்ந்து மேலும் பல அதிமுக அமைச்சர்களும்,எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ் பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு வலுத்துக்கொண்டு வருவதால் சசிகலா அணி அச்சமடைந்துள்ளது. இதனால் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்தார். அப்போது அவர், இன்று ஓ.பன்னீர் செல்வத்திற்கான எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஒன்று அதிகரித்துள்ளது.
இந்த ஆதரவு கூடிய விரைவில் 135ஆக அதிகரிக்கும். இந்த நாடகம் நிறைவடையும் நேரம் வந்துவிட்டது. தற்போது கூவத்தூரில் இருக்கக் கூடிய 20 எம்.எல்.ஏக்களோடு நான் தொடர்பில் இருக்கிறேன் என்றார் . அங்கிருக்கும் எம்.எல்.ஏக்கள் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்திருப்பார்கள் என்பதை நான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாஃபா பாண்டியராஜனின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களை கவனித்த சசிகலா குரூப் அமைச்சர்களை கண்காணிக்க விட்டுவிட்டது போல, அமைச்சர்கள் நிலோபர் கபில், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.சி. வீரமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய அமைச்சர்கள் ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்று ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஒபிஎஸ் அணி நிமிடத்திற்கு நிமிடம் களைகட்டி வருகிறது. கிரீன்வேஸ்சாலை நொடிக்கு நொடி பரபரப்படைந்துள்ளது.












Click it and Unblock the Notifications