கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக உடனடியாக அறிவிக்க வீரமணி வலியுறுத்தல்
கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கன்னியாகுமரி : ஓகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால் கன்னியாகுமரியை பேரிடர் பாதித்தா மாவட்டமாக உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என்று தி.க தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதோடு மீனவர்கள் பலர் கடலில் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், மீனவர்கள் மீட்புப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இழப்பீடு தொகையை கேரளாவுக்கு நிகராக வழங்க வேண்டும் என்று குமரி மாவட்டத்தில் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வருகிறார்கள்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஓகி புயல் பாதித்த இடங்களை பார்வையிடுவதற்காக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். நேற்று அவர் பூதப்பாண்டி அருகே புயலால் பாதிப்படைந்த விளை நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
இரண்டாம் நாளான இன்று குளச்சல் மற்றும் மீனவ கிராமங்களில் மீனவர்களைச் சந்தித்து வருகிறார். புயலில் சிக்கி பலியான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலியான மீனவர்களின் உருவப்படங்கள் குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். பின்னர் மீனவர்களிடம் பாதிப்பு விபரங்களை கேட்டறிந்தார்.
இதனையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ஓகி புயல் தாக்கி குமரி மாவட்டத்தில் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களும் ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை மீட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க எடுத்துள்ள நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
குழித்துறையில் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை மீனவர்கள் நடத்தியுள்ளனர். அதன்பிறகே பலியான மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரண நிதி போதுமானதாக இல்லை. இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், முதல்வர் விரைந்து வந்து இந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் அரசியல் பார்வையோ, மத பார்வையோ பார்க்காமல் ஆபத்து ஏற்படும் நேரங்களில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கி.வீரமணி தெரிவித்து உள்ளார் .












Click it and Unblock the Notifications