வீட்டுக்கு வீடு பைப் போடுறதா பணத்தை வாங்கி பஞ்சாயத்து பண்ண மோசடி.. பனைவிளை மக்கள் போராட்டம்
திசையன்விளை: தூத்துக்குடி மாவட்டம், அரசூர் பஞ்சாயத்து பனைவிளை கிராமத்தில் குடிநீர் திட்டத்தில் முறைகேடு மற்றும் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் ஆவேசப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர் பஞ்சாயத்து, பனைவிளை கிராம மக்கள், தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்தும், குடிநீர் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட பணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செலுத்தப்படாமல் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறியும் இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள பனைவிளை கிராமத்தில், வீடு தோறும் குடிநீர் திட்டத்திற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ. 1530 பஞ்சாயத்து நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வசூலிக்கப்பட்ட பணத்திற்கு ஈடாக தரமற்ற பைப்புகள் கொண்டு முறையான திட்டமிடல் இன்றி பைப் லைன்கள் அமைக்கப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறிய பைப் லைன்கள் அமைக்கப்பட்டதால், இரண்டு குடங்களுக்கு மேல் குடிநீர் பிடிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இதர தண்ணீர் தேவைகளுக்கு அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. வீடு தோறும் தடையின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அப்படியானால் மக்களிடம் வசூலித்த பணம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடைகாலத்தில் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், போதிய தண்ணீர் கிடைக்காததால் அப்பகுதி பெண்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொலைபேசியில் தங்களது கோரிக்கை குறித்து பேசியபோது, வீடு தோறும் குடிநீர் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ. 1530 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டப்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆவேசமாகத் தெரிவித்தனர். குடிநீர் திட்டத்தில் நடந்த இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, மக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications