தூத்துக்குடியில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: மக்கள் தவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு கிராமங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியை பொறுத்தவரை மாநகராட்சியான பின்பும் குடிநீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய மூன்று பைப் லைன் அமைக்கப்பட்டு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு குறைந்தபாடில்லை. அதிமுக தலைமையிலான கடந்த மாநகராட்சி நிர்வாகத்தில் தினமும் குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில நாளில் காணாமல் போனது. தொடர்ந்து 3 நாட்களுக்கு ஒரு முறை என்று படிப்படியாக உயர்ந்து இன்று 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நான்காவது பைப் லைன் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று வரை திட்டப்பணிகள் முடியவில்லை. குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்தும் மாநகராட்சி நிர்வாகம் முறையாக அறிவிப்பது இல்லை. இதன் காரணமாக குடிநீருக்காக இரவு முழுவதும் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகளை செய்ய முடியவில்லை. தனியார் லாரி தண்ணீரை வாங்குவதற்கு மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளதால் பொதுமக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.