கள்ளத் தொடர்பைக் கண்டித்த 72 வயது தாயை கூலிப்படை வைத்துக் கொன்ற மகன்!
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, தனது கள்ளக்காதலைக் கண்டித்த 72 வயது தாயாரை மூதாட்டி என்றும் பார்க்காமல் ஆள் வைத்துக் கொலை செய்துள்ளார் ஒரு நபர்.
கமுதி அருகே முஷ்டக்குறிச்சியை சேர்ந்தவர் மாரிமுத்து (35). அரசு போக்குவரத்துக் கழக ராமநாதபுரம் கிளையில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
மாரிமுத்துவுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. தாறுமாறாக வாழ்ந்து வந்தார். இதை அவரது தாயாரான 72 வயது காளியம்மாள் கண்டித்து வந்தார். இப்படி திரியாதே, மனைவி, குழந்தைகளுடன் ஒழுக்கமாக இரு என்று அறிவுறுத்தி வந்தார். ஆனால் மாரிமுத்து அதைப் பொருட்படுத்துவதில்லை.
இந்த நிலையில், காளியம்மாள் கடந்த ஆண்டு அக்டோபரில் வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரை சிலர் கொன்று அவர் போட்டிருந்த 5 பவுன் நகையைத் திருடிச் சென்றிருந்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மாரிமுத்து சிக்கினார். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி தாயை கொலை செய்ததாக விசாரணையின் போது மாரிமுத்து போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் நல்லமீட்டானையும் நேற்று கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications