அமோக விளைச்சல்: முருங்கை விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
நெல்லை: நெல்லை அருகே கழுகுமலை பகுதியில் முருங்கை நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் அதன் விலை திடீரென சரிந்துள்ளது.
நெல்லை அருகே உள்ள கழுகுமலையில் கடந்த சில வருடங்களாக பருவமழை தப்பி இருந்ததால் அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களை காற்றாலை அமைக்க கொடுத்துவிட்டு வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் கழுகுமலை பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பின. குறிப்பாக கழுகாசலமூர்த்தி கோவிலில் இருக்கும் சுமார் 40 அடி ஆழமுள்ள பழமையான தெப்பமும் பல ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளும், கழுகுமலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் தங்களது விலை நிலங்களில் பருத்தி, நெல், பாசி பயிறு, மக்காசோளம், உளுந்து, சூரியகாந்தி உள்ளிட்டவற்றை பயிரிட்டனர். வருடத்தில் பல மாதம் காய்த்து நல்ல பலன் தருவதால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கையையும் உபரியாக பயிர் செய்துள்ளனர்.
தற்போது கழுகுமலை பகுதியில் உள்ள முருங்கை மரங்களில் முருங்கை அதிகம் காய்த்து தொங்குகிறது. இதையடுத்து விவசாயிகள் முருங்கைக் காய்களை பறித்து கோவில்பட்டி மார்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். வரத்து அதிகரிப்பால் முருங்கையை கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். விலை வேகமாக சரிந்து வருவதால் முருங்கையை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.