தலைக்கேறிய போதை.. நடக்க முடியாமல் நடு ரோட்டில் படுத்து உருண்ட இளம் பெண்.. இது மதுரையில்!
மதுரை: மதுரை அருகே மேலூரில் அதிக அளவில் மது அருந்தியதால் போதை தலைக்கேறி நடக்க முடியாமல் சாலையில் விழுந்து புரண்டார் இளம் பெண் ஒருவர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தர, போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் நாட்டைக் கெடுக்கும் என்பார்கள். இன்று தமிழ்நாடும் இப்படித்தான் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. ஆண், பெண் பேதமே இல்லாமல் யாரைப் பார்த்தாலும் குடிகாரர்களாக மாறி நிற்கிறார்கள்.

தெருவுக்குத் தெரு திறந்து கிடக்கும் மதுக் கடைகளால் மக்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ நன்றாக குடிக்கக் கற்றுக் கொண்டு விட்டனர். ஆண்களும், பெண்களும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி சமூகமாக புரையோடிப் போக ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் மதுரை மேலூரில் ஒரு 19 வயதுப் பெண் மது போதையில் நடக்க முடியாமல் தடுமாறி சாலையில் விழுந்து புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணின் வீடு சமயநல்லூரில் உள்ளது. இவர் குடிப்பழக்கம் கொண்டவர். இவரது குடும்பத்தினர் மேலூர் அருகே உள்ள கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நேற்று வந்துள்ளனர். வந்த இடத்தில் நாக்கு அரிக்க ஆரம்பித்து விட்டது இந்தப் பெண்ணுக்கு. அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்தார். பாட்டிலை வாங்கிக் கொண்டு பின்னால் உள்ள மறைவிடத்திற்குப் போய் குடிக்க ஆரம்பித்தார். போதை தலைக்கேறிய நிலையில் வெளியே வந்தார்.
போதையில் நிலை தடுமாறிய அவர் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். ஆனால் நடக்க முடியாமல் தரையில் உட்கார்ந்த அவர் அப்படியே தரையிலேயே படுத்துப் புரண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி போதையைத் தெளிவிக்க முயன்றனர். முடியவில்லை. போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அப்பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஓடி வந்தனர். பெண்ணின் நிலையைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கதறினர். பிறகு அவரை வாகனத்தில் ஏற்றிக் கூட்டிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications