ராமப்பட்டனம் செக்போஸ்ட்டில் "ஆனந்த" நடனம் ஆடிய போலீஸ்காரர்.. காரணம் போதை!
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காவல்துறை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் நன்றாக குடித்து விட்டு போதையில் நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மாவட்ட எஸ்.பி. சுதாகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக இருந்து வருபவர் ஆனந்தகுமார். இவர் நேற்று சக போலீஸ்காரர்களுடன் பொள்ளாச்சி அருகிலுள்ள இராமப்பட்டினம் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது நல்ல போதையில் இருந்த ஆனந்தகுமார், திடீரென சக போலீஸாருடன் வாய்ச்சண்டையில் இறங்கினார்.
பின்னர் ரோட்டுக்கு வந்த அவர் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், டான்ஸ் ஆட ஆரம்பித்தார். சீருடையில் போலீஸ்காரர் ஒருவர் போதைத் தாக்குதலில் டான்ஸ் ஆடியதை அப்பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து அதிர்ந்தனர். பின்னர் பொதுமக்களே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். எஸ்.பி. சுதாகர் காதுக்கும் இது சென்றது. இதையடுத்து விசாரணை நடத்திய அவர் ஆனந்தகுமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.