வேலூர் அருகே குடிபோதையில் பெற்ற தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர்
வேலூர்: வேலூர் அருகே ஒருவர் குடிபோதையில் தனது தாயின் கழுத்தை அறுத்தை கொலை செய்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திமிரி அருகே இருக்கும் தாமரைப்பாக்கத்தை சேர்தவர் ரமேஷ். குடிப்பழக்கம் உள்ளவர். அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இப்படி தினமும் குடித்துவிட்டு வரும் நபருடன் இனியும் வாழ முடியாது என்று அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பாழாய் போன குடியால் மனைவியை பிரிந்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை.
மனைவி சென்றால் என்னவென்று குடித்துவிட்டு வந்து தனது தாய் பூங்காவனத்துடன் தகராறு செய்து வந்துள்ளார். அப்படி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் அரிவாளை எடுத்து பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் பூங்காவனத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ரமேஷ் தப்பியோட முயன்றார். ஆனால் போலீசார் அவரை வளைத்துப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.