பேஸ்புக்கில் மதுக் கோப்பையுடன் படம்.. நீக்கவில்லை சரத்.. அது போட்டோ ஷூட்டாம்!
தனது பேஸ்புக் பக்கத்தில் மதுக்கோப்பையுடன் இருப்பது போல போட்டிருந்த படத்தை உடனடியாக நீக்கிவிட்டார் சரத்குமார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியெல்லாம் உடனடியாக நீக்கவில்லை சரத்குமார்.
இன்னும் அதே படம்தான் அவரது டைம்லைனில் தொடர்கிறது.
நடிகர் சரத்குமாரை பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பல ஆயிரம் பின் தொடர்கிறார்கள். அவர் ஒரு நடிகராக மட்டுமல்ல, அரசியல் கட்சியின் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் உள்ளார். நடிகர் சங்கத்திலும் அவர் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் மதுப் புட்டிக்கு எதிரே நிரம்பிய மதுக் கோப்பையுடன் அவர் அமர்ந்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார். அதுவும் டைம்லைன் படமாக.
இது பலத்த விமர்சனத்தை கிளப்பியது. ஒரு மக்கள் பிரதிநிதி. கட்சித் தலைவர். இவர் எப்படி மதுக் கோப்பையுடன் உள்ள படத்தை பதிவிடலாம்..? இவரைப் பின்பற்றும் பல ஆயிரம் இளைஞர்களை இன்னும் மதுவுக்கு அடிமையாக்கும் செயலல்லவா இது? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து அந்தப் படத்தை நீக்கிவிட்டார் சரத் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் அந்தப் படம் இன்னும் பேஸ்புக் டைம்லைனில் தொடர்கிறது.
மேலும் இது ஒரு படத்தின் போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்ட படம். அதை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என சரத்குமார் சார்பில் கேட்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் மது, புகை காட்சிகளில் தோன்றுவதில்லை என உறுதி எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.