துரைமுருகனுக்கு நெஞ்சுவலி.. வேலூர் சிஎம்சியில் அனுமதி.. டாக்டர்கள் தீவிர சிகிச்சை
திமுக தலைமை கழக முதன்மை செயலாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான துரைமுருகன் சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திமுக தலைவர் கருணாநிதிக்கும், செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருப்பவர் துரைமுருகன். சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் செயலாற்றி வரும் அவர், சென்னைக்கு வரும் வழியில் திடீர் என்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இன்று காலை 5 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

துரைமுருகன், உடல் நலமுடன் உள்ளதாகவும், அச்சப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துரைமுருகன் வேலூர் காட்பாடி தொகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
கடந்த நவம்பர் மாதத்தில், துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 3 மாதத்திற்குள் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications