மோடி-ஜெயலலிதா சந்திப்பால், தமிழகத்தில் தேர்தல் சீக்கிரம் வரலாம்.. துரைமுருகன் கணிப்பு
வேலூர் : பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பால், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர வாய்ப்புள்ளதாக திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மத்திய மாவட்ட, தி.மு.க., சார்பில், பூரண மதுவிலக்கு கோரி, வேலூர் பழைய மாநகராட்சி எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது...

பூரண மதுவிலக்கு அறிவிப்பை, கருணாநிதி வெளியிட்ட பின், மது ஒழிப்பு போராட்டத்தை அனைத்து கட்சிகளும் கையில் எடுத்து விட்டனர். காங்கிரஸார் நாங்கள் வந்த காலத்தில் இருந்தே மது ஒழிப்பை கேட்கிறோம் என்கின்றனர். இவர்கள் கூறிய அறிவிப்பை, பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட கேட்கவில்லை.
கருணாநிதி அறிவித்த பிறகு, மக்கள் மத்தியில், அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி பாணியில் சொல்ல வேண்டும் என்றால், தற்போது, நாடே அதிருதுல்ல. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மதுவை ஒழித்தால், 25 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதை எப்படி சமாளிப்பர் என, கேள்வி எழுப்பியுள்ளனர்.
வருவாய் அதிகரிக்க மாற்று திட்டம் எங்களிடம் உள்ளது. தி.மு.க., வைச் சேர்ந்த, இரண்டு பேர் மது ஆலை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மதுக்கடையை அரசு திறந்துள்ளதால் தான், அவர்கள் மது ஆலையை திறந்து வைத்துள்ளனர். மதுக்கடைகளை அரசு மூடி விட்டால், மது ஆலையை அவர்கள் மூடி விடுவர்.
மதுக்கடைகளை, தி.மு.க., வினர் கொண்டு வந்ததாக சொல்கின்றனர். ஆனால், ராஜாஜி காலத்திலேயே, தமிழகத்தில் மதுக்கடை வந்து விட்டது. 1971ல், தி.மு.க., ஆட்சியில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டது. 1974ல் மூடி விட்டோம். எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வந்த பின்னர் தான், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
தற்போது ஜெயலலிதா அரசு படிப்படியாக ஊருக்கு, ஒரு மதுக்கடையை திறந்து விட்டது. மோடி-ஜெயலலிதா சந்திப்பால், தேர்தல் சீக்கிரம் வர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார்.












Click it and Unblock the Notifications