யாரு தெர்மகோலா... செல்லூர் ராஜூவை வாரிய துரைமுருகன்!
மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜு குறித்த கேள்விக்கு யாரு தெர்மகோலா என்று கேட்டு நக்கலடித்துள்ளார் முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.
மதுரையில் திமுக சார்பில் நடந்த நீட் தேர்வு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் துரைமுருகன். அப்போது செல்லூர் ராஜு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு துரைமுருகன் பதிலளிக்கையில், யாரு.. தெர்கோலா.. தமிழ்நாட்டின் அவமானச் சின்னத்தைப் பற்றிக் கேட்கறீங்களே என்று கூறிச் சிரித்தார்.
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதிலளிக்கையில், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விருப்பம் இருப்பவர்கள் வரலாம். இன்னார்தான் வர வேண்டும், இன்னார் வரக் கூடாது என்று சட்டமெல்லாம் இல்லை.
ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. தாராளமாக ரஜினி அரசியலுக்கு வரலாம்.
போலீஸ் வேலைக்குப் போனால் கூட படிப்பு கேட்பார்கள். ஆனால் படிப்பு குவாலிபிகேஷனே கேட்காத பீல்டு அரசியல்வாதி மட்டும்தான் என்று கூறிச் சிரித்தார் துரைமுருகன்.