அதிகாலை வடபழனி பயங்கரம்.. மின்கசிவால் தீவிபத்து.. உறக்கத்திலேயே பலியான நால்வர்
அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை: வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதில் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் மூச்சுத்திணறி உறக்கத்திலேயே விழிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து இரு சக்கர வாகனங்களுக்கு பரவியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

அதிகாலை தீ விபத்து
இன்று அதிகாலை 4.54 மணிக்கு கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். சத்தம் கேட்டு மூன்றாவது மாடியில் வசித்தவர்கள் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று கீழே இறங்கியுள்ளனர்.

4 பேர் பலி
முதல்தளத்தில் வசித்தவர்கள் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். தீயணைப்பு துறையினர் முழுவதுமாக தீயை அணைத்து விட்டு, அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கதில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனில்லமல் மீனாட்சி,60, செல்வி, 30, சஞ்சய்,4, சந்தியா,10 ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்துக்கு காரணம்
மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட தீ இருசக்கர வாகனங்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்ளே செல்ல அனுமதி மறுப்பு
தீ விபத்து நடந்த கட்டடத்திற்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது தடய அறிவியல்துறையினரும், உயர் அதிகாரிகளும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆட்சியர் உறுதி
தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும் ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications