இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள்: எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வாழ்த்து
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளுக்கு எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாக ஈஸ்டர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
அன்பின் மகத்துவத்தை உணர்த்திய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்த்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நாளை ஈஸ்டர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நன்னாளில், உலகில் அன்பும், சமாதானமும் தழைத்தோங்கிட, இயேசுபிரான் போதித்த நல்வழிப் பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், மனித நேயம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகள். இந்நாளில் ஒளிமயமான, இனிமையான வாழ்க்கை அமைய அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.