கத்தை கத்தையாக பணத்துடன் பிடிபடும் தினகரன் அடியாட்கள்- ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து?
ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரனின் அடியாட்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதையடுத்து ஆர்கே நகர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யலாம் என கூறப்படுகிறது.
சென்னை: வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரனின் அடியாட்கள் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரவக்குறிச்சி தொகுதியைப் போல ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலும் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வெல்ல வேண்டும்; அப்போதுதான் முதல்வர் நாற்காலியை கபளீகரம் செய்ய முடியும் என்பது தினகரனின் கணக்கு. ஆனால் தினகரன் ஜெயித்துவிட்டால் ஆட்டத்தை தாங்க முடியாதே என்பது அமைச்சர்களின் பலரது அண்ணம்.
இதனால் தினகரனுக்கு எதிராக ஆர்கே நகரில் உள்ளடி வேலைகள் ஜரூராக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனையெல்லாம் பணத்தை வாரி இறைத்து அசால்ட்டாக எதிர்கொண்டு வருகிறார் தினகரன்.

23 பேர் கைது
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக இதுவரை தினகரனின் அடியாட்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ. 70 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஐடியாக்கள்
என்னதான் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுடன் இருந்தபோதும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. தினகரனின் அடியாட்கள் ரூம்போட்டு யோசித்து புது புது ஐடியாக்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

தேர்தல் ரத்து?
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணம் தொடர்ந்து பட்டுவாடா செய்த காரணத்தால் அத்தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்திருந்தது தேர்தல் ஆணையம்.

அதிர்ச்சியில் திமுக, ஓபிஎஸ் அதிமுக
இதே அடிப்படையில் ஆர்கே நகர் தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யலாமா என்பது தேர்தல் ஆணைய வட்டாரங்கள் ஆலோசித்து வருகின்றனவாம். இதனால் திமுக, ஓபிஎஸ் அதிமுக ஆகியவை கடும் அதிர்ச்சியடைந்துள்ளன என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications