தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: கூடுதலாக 2 மணிநேரம் வாக்குப்பதிவு நடத்தும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கூடுதலாக 2 மணி நேரம் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி துவங்குகிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் மற்றும் வெளிமாநில போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் அளிப்பதை தடுக்க பறக்கும் படை அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் வரும் மே மாதம் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதாவது கூடுதலாக 2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறும். மே மாதம் அக்னி நட்சத்திரன்தின்போது வெயில் கொளுத்தும். அதை மனதில் வைத்து தான் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வரும் 4ம் தேதி காலை 7 மணி முதல் 16ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications