சரக்கு எவ்வளவு வருது, எவ்வளவு போகுது... ஸ்ரீரங்கம் டாஸ்மாக் கடைகளில் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை ஒருபக்கம் விதித்து வருகிறது. மறுபக்கம் பல நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு வருகிறது. அதில் ஒன்றாக தொகுதிக்குட்பட்ட 22 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் செலவீனப் பார்வையாளரான ஸ்ரீதர் டோஹ்ரா கூறுகையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் 22 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளின் அன்றாட இருப்புப் பதிவேடு மதுபான வகைகளின் ரகம் வாரியாக பதிந்து பராமரித்திட வேண்டும். சராசரி விற்பனையை விட கூடுதல் விற்பனை எந்தெந்தக் கடைகளில் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்து கண்காணித்திட வேண்டும்.
மதுபானக்கடைகளில் யாரேனும் சலுகை சீட்டுகள், அடையாள சீட்டுகளைக் கொடுத்தாலோ அல்லது மொத்தமாகவோ மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும் விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இரவு 10 மணிக்கு மேல் மது அருந்தும் எந்த பார்களும் இயங்கக்கூடாது. வெளி மாநில மதுபானங்கள் மாவட்டத்திற்குள் கொண்டு வருவதை தடை செய்திட அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் இரவும், பகலும் எந்நேரமும் சோதனை மேற்கொள்ள வேண்டும். மதுபானங்கள் மொத்தம் இருப்பு வைத்துள்ள குடோனில் சிசிடி.வி. மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.