லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு - 4 வகையில் கண்காணித்த தேர்தல் ஆணையம்
சென்னை: லோக்சபா தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தும் பொருட்டு வாக்குப் பதிவை நான்கு வகையில் கண்காணிக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தது தேர்தல் ஆணையம்.
வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து வாக்குப் பதிவு நடைமுறைகளையும் தேர்தல் ஆணையம் கண்காணித்தது.
இதுதொடர்பாக நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
குடித்து விட்டுத் தகராறு செய்யக கூடாது
வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்களில் வரக்கூடாது. இந்த எல்லைப்பகுதிக்குள் குடித்துவிட்டு தகராறு செய்தால், குற்ற வழக்கு தொடரப்படும்.
கோளாறு ஏற்பட்டால் அரை மணி நேரத்தில் ரிப்பேர்
வாக்குப்பதிவு அன்று ஏதாவது வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அரை மணிநேரத்தில் இருந்து ஒரு மணிநேரத்துக்குள் முழுமையாக வேறு எந்திரம் வைக்கப்படும்.
6 மணிக்குள் பூத்துக்குள் நுழைந்து விட்டால்
24-ந்தேதி மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி வளாகத்துக்குள் நுழைந்தவர்கள், இரவு என்றாலும் எவ்வளவு நேரமும் காத்திருந்து வாக்கு செலுத்தலாம்.
4 வகையான கண்காணிப்பு
வாக்குப்பதிவை 4 வகையில் கண்காணிக்கிறோம். வாக்குச்சாவடி முதன்மை அதிகாரி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பாக தகவல் அனுப்புவார். அது இணையதளத்தில் உடனுக்குடன் ஏற்றப்படும். அடுத்ததாக, 18 ஆயிரம் வாக்குச்சாவடிகளை வெப்காஸ்டிங் மூலம் நேரடியாக ஒளிபரப்புகிறோம். இதை நானும், மாவட்ட கலெக்டர்களும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கலாம். வேட்பாளர்களும், பத்திரிகையாளர்களும் அதைக்காண வசதி செய்யப்படும்.
படம் பிடித்து சிடியில் பதிவு
ஒரு வாக்குச்சாவடியில் ஏற்படும் பிரச்சினையை நேரில் கண்டு, அதற்கு தீர்வு காண இது வழிவகை செய்யும். மற்ற சில வாக்குச்சாவடிகளை வீடியோ படம் பிடித்து சி.டி.யாக பதிவு செய்வோம். மூன்றாவதாக, மண்டல குழுக்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட 10 அல்லது 12 வாக்குச்சாவடிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டு கண்காணிப்பார்கள். அதுபற்றி போனில் தகவல் சொல்லுவார்கள்.
3 தொகுதிக்கு ஒரு வருவாய் கோட்டாட்சியர்
நான்காவதாக, 3 தொகுதிக்கென்று ஒரு டி.ஆர்.ஓவை நியமித்துள்ளோம். அந்த வகையில் 19 டி.ஆர்.ஓ.க்கள் உள்ளனர். இவர்கள் அந்தத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளின் நிலவரங்களை அறிந்து, அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல் வார்கள். இந்த தகவல் அனைத்தும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுப்பப்படும்.
பிஐ இல்லாட்டி பிஎஸ்...
பொதுவாக, பி.ஐ., பி.எஸ். என்று தகவல் கொடுப்பார்கள். பி.ஐ. என்றால் வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது என்றும் பி.எஸ். என்றால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்றும் அர்த்தம்.
ஏஜென்டுகளுக்கு அனுமதி
வாக்குச்சாவடிகளுக்குள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் செல்லலாம். 42 வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் 42 ஏஜெண்டுகளும் சென்றால்கூட, அவர்களுக்கு இடம் தரப்பட வேண்டும். இவர்களில் முக்கிய ஏஜெண்டு, துணை ஏஜெண்டு என இரண்டு பேரில் ஒருவர் வரலாம். முக்கிய ஏஜெண்டு வெளியே செல்லும் நேரத்தில் துணை ஏஜெண்டு இருக்க வேண்டும்.
3 மணிக்கு மேல் வெளியேறக் கூடாது
ஆனால் வாக்குப்பதிவு அன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு வாக்குச்சாவடியை விட்டு முக்கிய ஏஜெண்டு வெளியே செல்லக்கூடாது. ஓட்டுப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படும் வரை அவர் அங்கேதான் இருக்க வேண்டும். அவரிடம் இருந்து ஒரு துண்டு சீட்டுக்கூட வெளியே போக அனுமதிக்கப்பட மாட்டாது என்றார் அவர்.