தமிழக-கேரள எல்லையில் மினிலாரியில் இருந்து ரூ. 3 லட்சம் பறிமுதல்
நெல்லை: தமிழக-கேரள எல்லையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை கோட்டைவாசல் பகுதியில் தமிழக தேர்தல் பறக்கும்படை அதிகாரி கணபதி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் கூடைவாசலில் இருந்து தமிழகம் நோக்கி வேகமாக வந்த மினி லாரியை அக்குழுவினர் நிறுத்தி சோதனை நடத்தினர்.
லாரியில் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரையில் இருந்து மரவள்ளி கிழங்கு வாங்க ராய் என்பவர் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்தி 700 ரொக்கத்தை எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மினி லாரி செங்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து தாசில்தார் செல்வநாயகத்திடம் பணமும், வாகனமும் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications