ரூ.45 லட்சம் மதிப்பிலான இலவச சேலைகள் பறிமுதல்- பறக்கும் படையினர் அதிரடி
நெல்லை: நெல்லை அருகே இலவச, வேஷ்டி சேலைகளை கொண்டு சென்ற லாரியை மடக்கிப் பிடித்த பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வேஷ்டி, சேலைகளின் மதிப்பு 45 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை சட்டமன்ற தொகுதி பறக்கும் படை தாசில்தார் அபுல்காசிம் தலைமையிலான குழுவினர் தாழையூத்து சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக இலவச வேஷ்டி சேலைகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக லாரி டிரைவர் நிலக்கோட்டையை சேர்ந்த கணேசனிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாமக்கல் குமாரபாளையத்தில் இருந்து நெல்லை கோ ஆப் டெக்ஸ் மேலாளருக்கு 225 மூட்டை இலவச சேலைகளும், 50 மூட்டை இலவச வேஷ்டிகளும் அனுப்பப்பட்டதாக ரசீதுகளை காட்டினார். எனினும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் இலவச வேஷ்டி, சேலைகளை லாரிகளில் அனுப்ப கூடாது என்பதால் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த லாரி நெல்லை தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. நெல்லை தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இலவச வேஷ்டி, சேலைகளும் முழுவதும் பாளை தாலுகா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.45 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி வாக்கு பதிவு நடப்பதால் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications