சசிகலா குடும்பத்தின் மொத்த அதிமுக கனவுக்கும் முற்றுப்புள்ளி!
சசிகலா குடும்பத்தின் அதிமுக கனவிற்கு தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணத்திற்கும், அவருக்கு அடுத்தபடியாக அதிமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க நினைத்த சசிகலா குடும்பத்தினரின் ஒட்டு மொத்த அதிமுக கனவிற்கும் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியில் அனைத்துமே 'சின்னமா' சசிகலா தான் என்ற கோஷம் ஓங்கி ஒளித்தது. இந்தக் குரலை மிரட்டி வரவைத்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராகவும் அரியாசணையில் அமரலாம் என்று நினைத்த போது தான் நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூரு சிறைக்குச் செல்லும் வழியை காட்டியது.
போகும் போதும் சின்னம்மா சும்மா போகவில்லை, தனக்கு பிறகு கட்சியை கட்டியாள டிடிவி. தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உட்கார வைத்துவிட்டுச் சென்றார். தினகரனும் தன் பங்கிற்கு கட்சியில் அடக்கி ஆள நினைத்து, அவசர அவசரமாக ஆர். கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போய் அவரது ஆட்டத்தையும் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் பெற முயன்ற விவகாரம் அடக்கிப் போட்டது.
சசிகலா, தினகரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ இவர்கள் அணிக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களும் கூட தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். நிராயுதபாணியாக அதிமுகவின் சின்னம், மற்றும் கட்சியின் பெயருக்காக தேர்தல் ஆணையத் தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அதற்கும் விழுந்தது சவுக்கடி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தினகரன் அணிக்கு ஆதரவு குறைவாக இருப்பதை காரணம் காட்டி மதுசூதனன் அணிக்கு இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஆக அதிமுகவை சொந்தம் கொண்டாடலாம் என்று தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த சசிகலா அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. மொத்தத்தில் அதிமுகவில் தலைமைப்பொறுப்பை ஏற்கலாம் என்ற கனவில் மிதந்த சசிகலா குடும்பத்தினரின் ஒட்டுமொத்த கனவிற்கும் இன்று முடிவு கட்டப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.