இரட்டை இலையைப் பெற லஞ்சம். தினகரன் மீது பாய்ந்தது அமலாக்கப் பிரிவு வழக்கு!
சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க ஹவாலா பண மோசடியில் டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்ட வழக்கில், இது வரை 1 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி இரவு டெல்லி தெற்கு பகுதியில் பிடிபட்ட புரோக்கர் சுகேஷ் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்துடன் டெல்லி குற்றப்பிரிவு போலீசிடம் பிடிபட்டார். இவர் அளித்த தகவலின்படி லஞ்ச பேர வழக்கில் டிடிவி தினரகன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், இருவரும் 15 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஹவாலா இடைத்தரகர் நரேஷ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நரேஷிடம் போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று காலையில் அவர் மறைத்து வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications