ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. கார்த்தி சிதம்பரம் அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் மகனான, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று காலை முதல், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

இந்த ரெய்டுக்கான காரணம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், "ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் காரணமாக, கார்த்தி சிதம்பரம் நடத்திய 'அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனத்திற்கு, பங்குகள் அடிப்படையில் நிறைய லாபம் கிடைத்துள்ளது.
2006ம் ஆண்டில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளது. அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், மேக்சிஸ் நிறுவனம்- ஏர்செல் நிறுவனம் நடுவேயான சுமார் ரூ.4000 கோடி வர்த்தகத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாகத்தான், கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு பலன் கிடைத்துள்ளது.
சிதம்பரத்தின் பதவியை வைத்து, கார்த்தி நிறுவனம் இந்த லாபத்தை பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின், பங்குதாரரான துவாரகநாதன் மற்றும் கார்த்தி சிதம்பரம் நிறுவனங்கள் இடையே பரிவர்த்தனை நடைபெற்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளன. இதன் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரிக்கிறோம். இதுகுறித்த மேலதிக தகவல்களை சேகரிக்கவே இந்த ரெய்டு" என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications