பிரதமரை சந்திக்க எடப்பாடி ஏன் உறவினரை உடன் அழைத்து சென்றார்? ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபர குற்றச்சாட்டு
பிரதமர் மோடியை உறவினருடன் எடப்பாடி சந்தித்தது தவறானது என ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு: பிரதமர் மோடியை உறவினருடன் எடப்பாடி சந்தித்தது தவறானது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறவினரை உடன் அழைத்து சென்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது அதிகாரிகள் யாரையும் உடன் அழைத்து செல்லாமல் அவரது உறவினர் ஒருவரை மட்டும் எடப்பபாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்க அழைத்து சென்றார்.
இந்த விவகாரம் பெரும் விவாதமானது. இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
ஆங்கிலம் பேச வராது
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்க உறவினரை உடன் அழைத்து சென்றது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆங்கிலம் பேச வராது என்றும் ஈவிகேஎஎஸ் இளங்கோவன் கூறினார்.
தவறானது என குற்றச்சாட்டு
ஆங்கிலம் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளை அழைத்து செல்லாமல் உறவினரை எதற்காக தன்னுடன் அழைத்து சென்றார் என்றும் கேள்வி எழுப்பினார். பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி உறவினருடன் சென்றது தவறானது என்றும் அவர் கூறினார்.
தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே..
ஆர்கே நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்கவே பிரதமரை சந்திக்கும் போது தனது உறவினரை அழைத்து சென்றுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி மோடியை சந்தித்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தவறான முன்னுதாரணம்
எடப்பாடி பழனிச்சாமி செய்தது தவறான முன்னுதாரணம் என்றும் அவர் கூறினார். பிரதமர் எப்படி இதனை அனுமதித்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டை போடாததால்..
விவசாயிகளை சந்திக்க பிரதமர் மோடி தொடர்ந்து மறுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கேட்டால் விவசாயிகள் சட்டை போடாமல் வருவதாக காரணம் சொல்வதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாடினார்.