அம்மா வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்... இது எடப்பாடி பழனிச்சாமி ஸ்டைல்
அம்மா வாழும் திசை நோக்கி வணங்குகிறேன் என்று அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே தமிழக அரசின் நோக்கம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அம்மா வாழும் திசை நோக்கி வணங்கி திட்டங்களை தொடங்கி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 1,486 கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 26 துறைகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தார். மொத்தம் 208 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் வழங்கிய முதல்வர்
மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் வாகனங்களையும், வணிகவரி, பதிவுத்துறை வாகனங்களையும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு அதிநவீன கருவிகளை முதல்வர் பழனிச்சாமி வழங்கினார். ரூ.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களையும் பழனிச்சாமி வழங்கினார்.
ஜெ. சாதனை திட்டங்கள்
கட்டங்களை திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனையின் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கப்பல் விபத்தில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.
110 விதி திட்டங்கள்
தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே தமிழக அரசின் நோக்கம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
வாழும் திசை நோக்கி வணக்கம்
வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்று உச்சரித்த பழனிச்சாமி, இந்த திட்டங்களை ஜெயலலிதாவே உயிருடன் இருந்து தொடங்கி வைப்பதாக கூறினார். மேலும் அவர், அம்மா வாழும் திசை நோக்கி வழங்குவதாக கூறினார். அவர் கூறியது யாரை என்பதுதான் குழப்பத்தில் ஆழ்த்தியது.