தினகரனுக்கு எதிராக 'சவுண்டு' விடும் அமைச்சர்கள் விரைவில் டிஸ்மிஸ்? நெருக்கடியில் எடப்பாடி!
டிடிவி தினகரனுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைச்சர்கள் விரைவில் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என கூறப்படுகிறது.
சென்னை: டிடிவி தினகரனுக்கு எதிராக செயல்படும் அமைச்சர்கள் சிலர் விரைவில் நீக்கப்படுவார்கள் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி, திவாகரன் அணி, நடராசன் அணி என ஆறு துண்டுகளுக்கும் மேலாக உடைந்துவிட்டது ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றிய அண்ணா தி.மு.க. இப்போது தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் பலர் திரண்டு வந்தாலும், கட்சியைக் கைப்பற்றும் வேலையில் முழுமையாக இறங்கிவிட்டது சசிகலா குடும்பம் என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்திலேயே, போயஸ் கார்டனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது மன்னார்குடி குடும்பம். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, திவாகரனும் நடராசனும் நேரடியாக தங்கள் ஆதிக்கத்தைக் காட்டினர். கடந்த ஜனவரி மாதம் நடந்த பொங்கல் விழாவில், இது ஆரியர் கட்சி அல்ல. திராவிடர் கட்சி என திவாகரன் முழங்க, நாங்கள் குடும்ப ஆட்சி செய்வோம் எனப் பகிரங்கமாகப் பேசினார் நடராசன்.

செக் வைத்த மத்திய அரசு
இதனால் கொதித்துப் போன மத்திய அரசு, ஆட்சி அதிகாரத்துக்குள் சசிகலா குடும்பம் நுழைய முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியது. ஆடிட்டரால்தான் இவ்வளவு பிரச்னையும். அவருக்கு எதுக்குய்யா போலீஸ் பாதுகாப்பு? எனச் சீறினார் நடராசன். ஆனால், மத்திய அரசின் மறைமுக தாக்குதலால் சசிகலா குடும்பத்தினர் சரண்டர் மனநிலைக்கு வந்தனர்.

தினகரன் தடாலடி
ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் நெருக்கத்தைக் காட்டினார் திவாகரன். இவர்கள் இருவரால்தான் எல்லா பிரச்னையும். கொஞ்ச காலம் இவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்' என சசிகலாவிடம் தினகரன் எடுத்துக் கூற, கார்டன் நிர்வாகத்தை வெங்கடேஷும் கட்சி நிர்வாகத்தை தினகரனும் கவனிக்கட்டும் எனச் சுட்டிக் காட்டிவிட்டு பெங்களூருவுக்குப் பயணப்பட்டார் சசிகலா. இதையே காரணமாக வைத்துக் கொண்டு, சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை எனப் பேட்டி அளித்தார் தினகரன்.

திவாகரனுக்கு எதிராக
இதன்பின்னர் நடந்த விவரங்களை விவரித்தார் மன்னார்குடி பிரமுகர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்தவுடன், திவாகரனின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் தினகரன். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் உள்பட பல விஷயங்களில் குடும்ப உறவுகளின் கோரிக்கையை நிராகரித்தார். உச்சகட்டமாக, திவாகரன் சம்பந்தி ஜெயச்சந்திரனை சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு தூக்கியடித்தார்.

சசியிடம் எச்சரிக்கை
அமைச்சர்களிடமும், அவர்கள் யாரும் கோரிக்கை வைத்தால் ஏற்க வேண்டாம் எனக் கூறிவிட்டார். இதனால், ஆவேசமான திவாகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து, ஆர்.கே.நகரில் அனுமதியே இல்லாமல் தினகரன் போட்டியிடுகிறார். குடும்ப உறவுகளை பந்தாடுகிறார். இப்படியே போனால், கட்சியையே அபகரித்துவிட்டு உங்களையும் தெருவில் நிறுத்திவிடுவார். அதுதான் நடக்கப் போகிறது எனக் கொதித்தார்.

கோபப்பட்ட சசிகலா
இதன்பின்னர், தினகரனும் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சசிகலாவை சந்தித்தபோது, நான் சொல்லாத விஷயங்களைக் கூறியதாக ஆடிய ஆட்டம் போதும். சொந்தபந்தங்களுக்கும் சேர்த்து கஷ்டத்தைக் கொடுத்துட்டேன். இனியாவது பார்த்து நடந்து கொள்ளவும் என தினகரனை எச்சரித்தாராம். இப்போது அதிமுகை முழுமையாக கைப்பற்றும் வகையில் எம்.எல்.ஏக்களை திரட்டி வருகிறார் தினகரன்.

அமைச்சர்கள் நீக்கம்?
தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது எதிராக குரல் கொடுத்து வரும் அமைச்சர்களை நீக்க வேண்டு என நெருக்கடி கொடுப்போம்... முதல்வர் பதவியை தக்க வைக்க எடப்பாடியும் வேறுவழியே இல்லாமல் அந்த அமைச்சர்களை நீக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்... பொறுத்திருங்கள் என கூறி வருகிறாராம் தினகரன். இதனால் எதிர்ப்பு குரல் கொடுத்த அமைச்சர்கள் பதவி பறிபோகுமோ என பீதியில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications