'ஆக்டிவ்' முதல்வராக நிரூபிச்சே ஆகனும்... ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி!
சேலம் : இரண்டரை மாத ஆட்சியில் செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களின் பட்டியலை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த பிப்ரவரி 5ம் தேதி பொறுப்பேற்ற சசிகலா, பத்தே நாட்களில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதையடுத்து அதிமுக அம்மா அணி தினகரன் தலைமையில் இயங்கி வந்தது. தினகரன் மீதும் இரட்டை இலை சின்ன லஞ்சப் புகாரில் வழக்கு பாய தற்போது அதிமுக அம்மா அணி எடப்பாடி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் அதிமுகவின் இபிஎஸ் அணி மற்றும் ஓ.பிஎஸ் அணியை இணைக்கும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இரண்டு தரப்பிலும் கூறப்பட்டு வரும் நிலையில், தனது தலைமையின் கீழ் ஆட்சியை சிறப்பாக செயல்படுவதாக மக்கள் மத்தியில் பெயரை சம்பாதிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் எடப்பாடியார்.
எடப்பாடி சிறந்த தலைவர் கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி தொடர்பான எந்த முடிவுகளாக இருந்தாலும் மூத்தநிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுத்து வரும் நிலையில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களின் முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
எனினும் சொந்த தொகுதியான சேலம் மற்றும் எடப்பாடியில் கட்சியினரிடையே பெரிய அளவில் ஆதரவு இல்லாதததால் அதனை அதிகரிக்கும் வகையிலேயே சேலத்தில் 3 நாள் முகாமிட்டு கட்சியையும் தனக்கான ஆதரவையும் பலப்படுத்தும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது வர்தா புயல் நிவாரணப் பணி, ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிருஷ்ணா நீரை தமிழகத்திற்கு கொண்டு வந்தது என்று ஜெயலலிதா ஆலோசனை இல்லாமல் நடைபெற்ற இரண்டரை மாத கால ஆட்சியில் மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளதால், தனக்கும் இது சவாலான காலம் என்று எடப்பாடி கருதுகிறாராம்.
அதன் முன்னோட்டமாகவே சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வராக பதவியேற்று 70 நாட்களில் ஆயிரத்து 560 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும், ஒரு கோப்பு கூட நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் கூறினாராம். மேலும் தனது ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதை நிரூபிப்பதற்காக அவருடைய ஆட்சியில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள், கையெழுத்தான ஒப்பந்தங்கள், நிறைவேற்றப்ப்டட திட்டங்கள் என அனைத்து பட்டியலையும் தயாரிக்கும்படி அனைத்து துறைக்கும் சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.